சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கப் போகும் 43வது படம் குறித்த அப்டேட்டை நாளை (26/10/23) வெளியிடவிருக்கிறது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம். பல நாள்களாக இந்தப் படம் குறித்த பல செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றன. நாம் விசாரித்த வகையில் கிட்டத்தட்ட அந்தச் செய்திகள் அனைத்துமே உண்மைதான். இந்த செய்திகளைத்தான் தயாரிப்பு நிறுவனம் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறது.

‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு சூர்யாவை மீண்டும் இயக்கவிருக்கிறார் சுதா கொங்கரா. இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கவிருக்கிறார்கள். பேன் இந்தியா அளவில் பல படங்களில் ஹீரோவாக நடித்துவரும் துல்கர், இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.
துல்கர் சல்மான் சூர்யாவின் தீவிர ரசிகர் என்பதைப் பல பேட்டிகளில் கூறியிருந்தார். இந்தப் படத்தில் அவர் கமிட்டானதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். துல்கரைப் போலவே இந்தப் படத்தில் நஸ்ரியா நடிப்பதும் ஆச்சரியமான விஷயம்தான். திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் நடிக்காமலிருந்தவர் சமீபமாகத்தான் மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். செலக்ட்டிவ்வாக கதைகளைத் தேர்வு செய்து வரும் நஸ்ரியா, இந்தப் படம் மூலம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்கவிருக்கிறார்.

நடிகர், நடிகை தேர்வைப் போலவே டெக்னீஷியன் லிஸ்டிலும் பல சர்ப்ரைஸ் இந்தப் படத்தில் இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படம் இதுதான். ஜி.வி.பிரகாஷுக்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்ததும் இதே கூட்டணியில் உருவான ‘சூரரைப் போற்று’ படம்தான் என்பதால், இதற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதேபோல் ‘சூரரைப் போற்று’ படத்தின் எடிட்டர் சதீஷ் சூர்யாதான் இந்தப் படத்திற்கும் எடிட்டர். இந்த முறை இக்கூட்டணியில் ஒளிப்பதிவாளர் மட்டும் மாறியிருக்கிறாராம். அந்தப் பிரபலமான கேமராமேன் யார் என்பதை நாளை வரும் அப்டேட்டில் நாம் தெரிந்துகொள்ளலாம்.