ஆளுநர் மாளிகை முன்பு நடந்தது என்ன? – கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தகவல்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிண்டி சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆளுநர் மாளிகை நுழைவாயிலை நோக்கி ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீச முயன்றார். அப்போது, பாதுகாப்பில் இருந்த போலீஸார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது, அவர் கையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து வீசினார். அந்த பாட்டிலின் திரியில் மட்டும் கொஞ்சம் தீ வந்தது. பாட்டில் உடைந்து விட்டது. போலீஸார் அவரை உடனே பிடித்துவிட்டனர். அவர் 2 பாட்டில்களை வீசியுள்ளார். அவரிடமிருந்து மேலும் 2 பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. குடித்துவிட்டு இதுபோன்ற சம்பவத்தில் அந்த நபர் ஈடுபட்டுள்ளார். விசாரணையில் அவரது பெயர் ரவுடி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்துள்ளோம். பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஆளுநர் மாளிகை போலீஸார் உஷாராக இருந்த காரணத்தாலும், பலத்த போலீஸ் பாதுகாப்பாலும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.