சேலம்: வாடகை கட்டடத்தில் காவல் நிலையம்; கழிப்பறை வசதிகூட இல்லாததால், அவதிக்குள்ளாகும் காவலர்கள்!

சேலம் மாநகரக் காவல்துறையில் 15-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. சுமார் 1,500-க்கும் மேற்பட்ட காவலர்களை உள்ளடக்கியும், 3 ஆயுதப்படைப் பிரிவுகளையும் கொண்டு சேலம் மாநகரக் காவல்துறை இயங்கி வருகிறது. மாநகரக் காவல் நிலைய எல்லையானது பரப்பளவில் குறைவாக இருந்தாலும், மாநகர எல்லைக்குள் வசிக்கக்கூடிய மக்கள்தொகை என்பது அதிகமாகும். இந்த நிலையில்தான், சமீபத்தில் தமிழக சட்டசபையில் சேலம் மாவட்டக் காவல்துறையின்கீழ் இயங்கி வந்த ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தையும், காரிப்பட்டி காவல் நிலையத்தையும் மாநகரக்குள் கொண்டுவருவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பள்ளப்பட்டி காவல் நிலையம்

காரணம், மேற்கண்ட இரண்டு காவல் நிலையங்களும் ஒதுக்குபுறமாக அமைந்திருப்பதால், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் ஊடுருவலும், ரெளடிஸமும் அங்கு அதிகமாக இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர். அதன் காரணமாகவே உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், மேற்கண்ட காவல் நிலையங்கள் மாநகருக்குள் இணைக்கப்பட்டிருக்கின்றன.    

அந்த வகையில் மாநகர எல்லையிலுள்ள முக்கிய காவல் நிலையங்களில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் பள்ளப்பட்டி காவல் நிலையமும் ஒன்று. இங்கு 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண் காவலர்களும் அடக்கம். இந்தக் காவல் நிலையமானது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில், வாடகைக்கு இயங்கி வருகிறது. ஆனால், இங்கு முறையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்கின்றனர். ஆபத்தான நிலையில் கட்டடம் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இது குறித்து விஷயமறிந்த காவல் அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “தற்போது காவல் நிலையம் அமைந்திருக்கும் கட்டடத்தில், மழைக்காலங்களில் சாக்கடையுடன்கூடிய தண்ணீரானது உள்ளே புகுந்துவிடுகிறது. அதையும் தாண்டி பெண் காவலர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்கான கழிப்பிட வசதிக்கூட இல்லை. அவசரத்துக்கு பேருந்து நிலையம் அருகே அமைந்திருக்கும் கழிப்பிடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதையும் தாண்டி விபத்து மற்றும் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையிலேயே போடுகிறோம். இதெல்லாம் ஒரு நாள் இரண்டு நாளில் எடுக்கக்கூடிய வாகனங்களாக இருந்தால்கூட பரவாயில்லை. அனைத்தும் வழக்குகள் முடியும்வரையிலும் இங்குதான் கிடக்கின்றன.

வழக்குகளில் சிக்கிய வாகனங்கள்

இதனால் காவல் நிலையத்துக்கு எதிரேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையெல்லாம் எங்கள் மேலதிகாரிகள்தான் அரசு கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், இதுவரை அப்படிச் சென்றதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், காவல் நிலைய பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் இரண்டு முறை குரல் எழுப்பினார். ஆனால் அதில் எந்தவித பலனும் இல்லை” என்றனர்.

அருள், பா.ம.க எம்.எல்.ஏ

மேலும் இது குறித்து சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருளிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பிரச்னை குறித்து, நான் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தது உண்மைதான். ஆனால், அதனால் எந்த பலனும் இல்லை. தமிழக முதல்வரிடம்கூட இதுபற்றி தெரிவித்துவிட்டேன். ஆனால், அதிகாரிகள் மட்டத்தில் எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை. சமீபத்தில்கூட பள்ளப்பட்டி காவல் நிலையத்தை, அருகேயுள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு மாற்றலாம் என்று பேச்சு அடிப்பட்டது. அதற்குள் சம்பந்தப்பட்ட வளாகம் அனைத்தும் டெண்டர் விடப்பட்டுவிட்டது” என்றார்.

ஏ.கே.விஷ்வநாத்

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாத்திடம் பேசியபோது, “புதிய கட்டடம் கட்டுவது தொடர்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவிலிருந்து அப்ரூவல் கிடைத்து வந்த பிறகுதான், எங்களுக்கான வேலைகள் அதில் இருக்கும். இதற்கு இட வசதி, எவ்வளவு நிதிக்குள் கட்டடம் கட்ட வேண்டும் என்றெல்லாம் அரசு முடிவுசெய்து, எங்களுக்குத் தெரிவித்த பின்னரே, நாங்கள் எங்கள் தரப்பில் செய்ய வேண்டியதைச் செய்ய முடியும். இது குறித்து நானும் விசாரிக்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக சேலம் மாநகரக் காவல்துணை ஆணையர் கெளவுதம் கோயலிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு மாற்று இடம் பார்த்திருக்கிறோம். பேருந்து நிலையம் அருகேயே இருக்கும் மாநகராட்சிக் கட்டடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறோம். இது குறித்து மாநகராட்சி ஆணையரிடமும் பேசியிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களில் காவல் நிலையம் மாற்றியமைக்கப்படும்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

மேலும் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தரிடம் பேசியபோது, “இது தொடர்பாக நாங்கள் அனுமதி அளித்தது போன்று, எனக்குத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பதிலளிக்கிறேன்” என்றார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் பேசியபோது, “காவல்துறை சார்பாக சொந்த கட்டடம் கட்டுவதற்கு இடம் பார்த்துவருகின்றனர். அது இப்போது வரையிலும் அமையவில்லை. அப்படி இடம் தேர்வு செய்யப்பட்டால் அப்ரூவலுக்கு என்னிடம் வரும்” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.