பெட்ரோல் குண்டு வீசிய வினோத்துக்கு 15 நாள் காவல் கேட்டு நீதிமன்றத்தில் போலீஸார் மனு

சென்னை: சிறையில் உள்ள ரவுடி கருக்கா வினோத்தை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வினோத், நீதிமன்ற காவலில் 26-ம் தேதி அதிகாலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் சிறையில் உள்ளதால் பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணத்தை போலீஸாரால் உடனடியாக தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம், பின்னணியில் உள்ளவர்கள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை பெறுவதற்காக வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர்.

அதன்படி, வினோத்தை 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி போலீஸார் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. அன்று அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.