சென்னை | ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

சென்னை: இருசக்கர வாகனத்தை ஓட்டி வருபவர் மட்டுமின்றி, பின்னால் உட்கார்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்திருந்தால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீஸார் லட்டு வழங்கினர்.

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிவது இல்லை.

இதனால், போக்குவரத்து போலீஸார் அபராத நடவடிக்கையை அவ்வப்போது தீவிரப்படுத்தி வருகின்றனர். தவிர, இருசக்கர வாகனங்களில் செல்லும் 2 பேரும் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அடிக்கடி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில் போக்குவரத்து போலீஸார் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். கார்ட்டூன் பொம்மைபோல வேடமணிந்த கலைஞர்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, இருசக்கர வாகனம் ஓட்டுபவர், பின்னால் உட்கார்ந்திருப்பவர் ஆகிய இருவரும் ஹெல்மெட் அணிந்து, உத்தரவை முறையாக கடைபிடித்து வந்தவர்களுக்கு லட்டுகளை வழங்கி போக்குவரத்து போலீஸார் ஊக்கப்படுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.