Aarudhra Case; `நாடு திரும்பினால் கைதுசெய்யப்படுவேன்..!' – நீதிமன்றத்தில் முறையிட்ட ஆர்.கே.சுரேஷ்

சென்னை அமைந்தகரையைத் தலைமயிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவிகிதம் வரை வட்டி தருவதாகக் கூறி, சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகரும் தயாரிப்பாளரும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான ஆர்.கே.சுரேஷுக்கும் இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

அதனடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேஷுக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவினர் சம்மன் அனுப்பியிருந்தனர். அதையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவினர் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருக்கிறது.

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பித்தனர். இந்த நோட்டீஸை திரும்பப் பெற உத்தரவிடக் கோரி, மற்றொரு வழக்கை ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்தார்.

ஆர்.கே.சுரேஷ்

அந்த மனுவில், `பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ என்னை அணுகினார். அது தொடர்பாக மட்டுமே பணப் பரிவர்த்தனை நடந்தது. ஆருத்ரா மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை. மனைவி, குழந்தையை கவனித்துக் கொள்வதற்காகவே தற்போது துபாயில் இருக்கிறேன். நாடு திரும்பினால் கைதுசெய்யும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நாடு திரும்பியதும் நான் கைதுசெய்யப்பட வாய்ப்பிருப்பதால், அதனை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ்

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, டிசம்பர் 10-ம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப இருப்பதாகவும், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நவம்பர் 8-ம் தேதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.