மருந்து தயாரிப்பு மற்றும் ஜவுளி தயாரிப்பு ஆகிய நிறுவனங்களில் இருந்து அதிக அளவு கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இந்த கழிவு நீரில் இருந்து மாசுக்களை அகற்றுவதற்காக அதிநவீன கருவிகளை கண்டறியும் முயற்சியில், சென்னை ஐஐடி மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு வந்தன.

இந்நிலையில், இந்த குழு கழிவுநீரில் இருந்து மாசுக்களை அகற்றும் ‘ஏரோஜெல்’ எனும் திடப்பொருளை கண்டறிந்து சாதனைபடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கழிவு நீரில் இருந்து 76 சதவீத மாசுக்களை அகற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தலைமை வகித்தார். இக்குழுவில் சென்னை ஐஐடி வேதிப் பொறியியல் துறையை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுபாஷ்குமார் சர்மா, பி.ரஞ்சனி மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹடாஸ் மாமனே ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் பேசுகையில், “மருந்துகள் உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் இருந்து மாசுக்களை அகற்றுவது என்பது கடினமான காரியம். இதை சமாளிக்க அதிநவீன ஏரோ ஜெல் திடப்பொருளை தற்போது கண்டறிந்துள்ளோம். இதன்மூலம், கழிவு நீர் மாசு உறிஞ்சுதல் முறை ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், 76 சதவிகித மாசுக்கள் அகற்றப்பட்டன. இது மிகப்பெரிய சாதனையாகும்” என்றார்.