காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை: வதந்திக்கு ஸ்ரீதிவ்யா முற்றுப்புள்ளி

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு காக்கி சட்டை, மருது, ரெமோ, சங்கிலி புங்கிலி கதவதிற என வரிசையாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. திடீரென வாய்ப்புகள் நின்றுவிட சொந்த ஊருக்கே திரும்பியவர் தற்போது 6 வருடங்களுக்கு பிறகு 'ரெய்டு' படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்துள்ளார். படத்தை கார்த்திக் இயக்கி உள்ளார். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்; சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார்.

படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்துள்ள ஸ்ரீதிவ்யா படத்தில் நடித்திருப்பது பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பெரிய இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் வந்திருப்பதாக சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தமிழில்தான் நடிக்கவில்லையே தவிர மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சில படங்களின் கதை சரியில்லை என்று நடிக்க மறுத்தேன். கடந்த சில வருடங்களாக எனக்கு ஏற்ற வேடங்கள் தமிழில் இருந்து வரவில்லை. மற்றபடி தமிழ் படத்தில் நடிக்க நான் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறேன்.

மருது படத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து பணியாற்றினேன். வெள்ளக்கார துரை படத்தில் விக்ரம் பிரபுவுடன் பணியாற்றினேன். எனவே இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு எளிதாக இருந்தது. இந்த படத்தில் தங்கைக்காக போராடும் ஒரு அக்காவாக நடித்திருக்கிறேன். தங்கைக்கு ஒரு பிரச்னை வரும்போது கதை நாயகன் விக்ரம் பிரபுவுடன் சேர்ந்து அதை எப்படி சரி செய்கிறேன் என்பதுதான் படத்தின் கதை.

சமீபகாலமாக நான் யாரையோ காதலிப்பது போன்றும், அவரையே திருமணம் செய்ய இருப்பது போன்றும் தவறான வதந்திகள் பரவி வருகிறது. அப்படி எங்கேயும் நான் சொல்லவில்லை. ஒரு நேர்காணலில் உங்கள் திருமணம் காதல் திருமணமாக இருக்குமா? பெற்றோர் முடிவு செய்யும் திருமணமாக இருக்குமா என்று கேட்டார்கள். அதற்கு அதை சூழ்நிலைதான் முடிவு செய்யும் என்று கூறியிருந்தேன். அதை திரித்து வதந்தி பரப்பி விட்டார்கள். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.