சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு: திமுக எம்.பி. கவுதம சிகாமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்டோர் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் லோகநாதன் மட்டும் இறந்து விட்டார். இந்நிலையில், இந்த வழக்கின் அடிப்படையில் சட்ட விரோதபணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் திமுக எம்.பி, கவுதமசிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், வழக்கை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கவுதம சிகாமணி கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் நவம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.