தமிழில் பிஸியாகும் மடோனா செபாஸ்டியன் : பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார்

'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகைகளில் மடோனா செபாஸ்டியனும் ஒருவர். அடுத்த படமே 'காதலும் கடந்து போகும்' என்ற தமிழ் படம் தான். அதன்பிறகு கவண், பவர் பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மடோனா 'லியோ' படத்தின் மூலம் திடீர் என்ட்ரி கொடுத்தார். விஜய் தங்கை எலிசாவாக ஆக்ஷனில் கலக்கி மீண்டும் கவனத்துக்கு வந்திருக்கிறார்.

இதனால் தமிழ் இயக்குனர்களின் பார்வை தற்போது மடோனா பக்கம் திரும்பி இருக்கிறது. சத்தமின்றி பிரபுதேவா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கும் இதில் யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்ஜி மகேந்திரன், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர், சாய் தீனா, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். தென் மாவட்டங்களில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் டைட்டில் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட இருக்கிறது.

படம் குறித்து ஷக்தி சிதம்பரம் கூறியதாவது: இப்படத்தின் கதைக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன். இரண்டு வருடமாக செதுக்கி முடித்த திரைக்கதையோடு பிரபுதேவாவிடம் சென்றேன். கதையை முழுதுவமாக கேட்ட அவர் இப்படத்திற்கு தன்னை முழுமையாக ஒப்படைத்தார். படத்தை மிகத்தரமாக உருவாக்க பட்ஜெட் விஷயத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பலகோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.