”தேதி, நேரத்தைச் சொல்லுங்கள்” – அமித் ஷாவின் சவாலை ஏற்ற சத்தீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர்: கடந்த 15 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த பணிகள் குறித்தும், 5 வருடங்களாக நாங்கள் செய்த பணிகள் குறித்தும் விவாதம் நடத்தத் தாயாராக இருக்கிறேன் என அமித் ஷாவின் சவாலை ஏற்றுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்.

சத்தீஸ்கரில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 40.78 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. மகாதேவ் சூதாட்ட ஆப் (செயலி) உரிமையாளர்களிடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ508 கோடி பணம் பெற்றார் என அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மகாதேவ் சூதாட்ட செயலியை மத்திய அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சத்தீஸ்கரில் உள்ள பண்டாரியா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர், கடந்த 5 ஆண்டுகளில் சத்தீஸ்கர் முதல்வர் செய்த பணிகள் குறித்தும், 15 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த பணிகள் குறித்தும் பாஜகவுடன் விவாதம் செய்யுமாறு பாகேலுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையொட்டி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “உங்கள் சவால் ஏற்கப்பட்டது அமித் ஷா. தயவுசெய்து தேதி மற்றும் நேரத்தைச் சொல்லுங்கள். பொதுமக்கள் ஏற்கெனவே மேடையை தயார் செய்துவிட்டனர். 15 வருடங்களில் நீங்கள் செய்த பணிகள் பற்றியும், 5 வருடங்களாக நாங்கள் செய்த பணிகள் குறித்தும் விவாதம் நடத்தத் தாயார்” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு இருபுறமும் அமித் ஷா, பூபேஷ் பாகேல் ஆகியோரின் பெயர்களைக் கொண்ட கருப்பு சோபாவும் இடம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.