ICC World Cup 2023: உலக கோப்பை 2023 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிய உள்ளது. கடந்த மாதம் தொடங்கிய உலக கோப்பை போட்டிகள் பலவித திருப்பங்களுடன் சென்று கொண்டுள்ளது. இந்தியா, சவுத் ஆப்பிரிக்கா அணிகள் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்ட நிலையில், நேற்று ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் ஆஸ்திரேலியா 3வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மேக்ஸ்வெல்லின் அதிரடியில் ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் கையில் இருந்த போட்டியை, தனது அசாத்தியமான ஆட்டத்தால் தனி ஆளாக 200 ரன்கள் அடித்து வெற்றி பெற செய்துள்ளார் மேக்ஸ்வேல். 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 91/7 என்ற நிலையில் தத்தளித்தது. இருப்பினும், க்ளென் மேக்ஸ்வெல் தனது அணியைக் காப்பாற்ற ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், தற்போது 4வது அணியாக யார் அரையிறுதிக்கு தகுதி பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
View this post on Instagram
அரையிறுதியில் 4வது இடத்திற்கு 3 அணிகள் போட்டி போடுகின்றன. பங்களாதேஷ், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்ரீலங்கா அணிகள் வெளியேறியுள்ள நிலையில், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய போட்டி போடுகின்றனர். ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் ஆப்கானிஸ்தான் கனவு கொஞ்சம் நினைவாகி இருக்கும். இருப்பினும், தற்போதும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அரையிறுதி போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. நவம்பர் 11 ஆம் தேதி கொல்கத்தாவில் பாகிஸ்தான் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து தனது 9வது போட்டியில் இலங்கைக்கு எதிராக நவம்பர் 9 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றும், நியூஸிலாந்து தோல்வியும் அடைந்தால், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தானுக்கு 10 புள்ளிகள் கிடைக்கும்.
பின்பு, நவம்பர் 10ம் தேதி நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெரும். ஆனால், தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், இரு அணிகளும் 10 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும், பின்னர் இரு அணிகளுக்கான நிகர ரன் ரேட் (NRR) படி அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை, இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற்று, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆட்டத்தில் மழை பெய்தால், நியூஸிலாந்து இந்தியாவுடன் அரையிறுதியில் விளையாடும். ஒருவேளை, ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால், அந்தச் சூழ்நிலையில், NRR படி நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் தகுதி பெரும்.
இந்திய அணி தனது ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முடிவுகள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்தியா வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும். இதனால் நெதர்லாந்து போட்டியில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, பெஞ்சில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.