தொடர்ச்சியான விரிவான கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆங்கில மொழி அறிவை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையின்; போதே ஜனாதிபதி இதனைத் தெலிவித்தார்.
மேலும், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறாத இளைஞர், யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான பயிற்சி நெறிகளுக்கு 150 மில்லியன் ரூபாவை இலங்கை மன்றத்திற்கு ஒதுக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய உயர்கல்வி ஆணைக்குழு ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், தீர்மானங்களை எடுக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை அவ் ஆணைக்குழுவுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டியில்லா மாணவர்; கடன் வழங்கும் முறைக்கு மேலதிகமாக இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வர்த்தக வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முறையொன்று முன்மொழிந்துள்ளதுடன், தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றதன் பின்னர், அக்; கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரமுள்ள சட்டங்களை இயற்றிய பின்னர், அந்த பல்கலைக்கழகங்களை இலங்கையில் நிறுவுவதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து அவ் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும், அடுத்த வருடத்திற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கவும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நான்கு புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், எதிர்காலத்தில் மாகாண சபைகளும் பல்கலைக்கழகங்களை நிறுவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அல்லது மூன்று மடங்காக அதிகரிப்பதே எமது நோக்கமாகும் என்றும் வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.