புதுடெல்லி: உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மனைவியைப் பார்க்க நீதிமன்ற அனுமதியுடன் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, திகார் சிறையில் இருந்து தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் துணை முதல்வராகவும், கலால் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் மணிஷ் சிசோடியா. புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிஷ் சிசோடியா, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்து உத்தரவிட்டது.
மணிஷ் சிசோடியாவின் மனைவி சீமா உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், அவரை நேரில் காண டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனைவியை காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் பார்க்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, திகார் சிறை வேன் மூலம், டெல்லியில் மதுரா சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்புடன் மணிஷ் சிசோடியா வந்தார்.
வழக்கின் பின்னணி: டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.