சுப்ரீம் கோர்ட்டின் தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய மக்கள்

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமுடன் கொண்டாடிய நிலையில், டெல்லியின் பல பகுதிகளில் பட்டாசு வெடிப்பதற்கான தடை மீறப்பட்டது.

ஷாபூர் ஜாட் மற்றும் ஹவுஸ் காஸ் பகுதியில் மக்கள் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள பூங்காவில் பட்டாசு வெடிப்பதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் மாலை 6 மணி முதல் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்பகுதியில் உள்ள பல கடைக்காரர்கள் தடையை மீறி சிறு சிறு பட்டாசுகளை குழந்தைகளுக்கு விற்பனை செய்து வந்தனர். தெற்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ் பகுதியிலும் சிலர் பட்டாசுகளை வெடித்தனர்.

இருப்பினும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது மிகக் குறைவு என, இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி பகுதியில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரியம் அடங்கிய பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.