இஸ்ரேல் பணய கைதிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் 2.9 லட்சம் பேர் பேரணி

வாஷிங்டன் டி.சி.,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 லட்சம் பேர் பேரணியாக சென்றனர்.

இஸ்ரேல் அதிபர் ஈசாக் ஹெர்ஜாக் லைவ் வீடியோ வழியே திரளான கூட்டத்தினரிடம் ஆற்றிய உரையின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால் பணய கைதியாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், ஆடவர் மற்றும் மகளிருக்காக பேரணி நடத்த இவர்கள் ஒன்றிணைந்து உள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகம் முழுவதும் ஒவ்வொரு யூதரும் பெருமையுடனும் மற்றும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான உரிமைக்காக பேரணி நடைபெறுகிறது என பேசியுள்ளார்.

இந்த பேரணியில், கல்லூரி மாணவ மாணவிகளும் பங்கேற்றனர். அவர்கள் பணய கைதிகளுக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்தபடி காணப்பட்டனர். அக்டோபர் 7-ந்தேதிக்கு பின்னர் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவில் அதிக அளவில் மக்கள் கூடிய நிகழ்வாக இது உள்ளது.

இதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கான துறை தெரிவிக்கின்றது. யூதர்களுக்கு எதிரான போக்கை கண்டிக்கும் வகையிலும் மற்றும் பணய கைதிகளை விடுவிக்க கோரியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.