உலக கோப்பை 2023: இந்தியா முதல் பேட்டிங், சிக்சர் மழை பொழியும் ரோகித் சர்மா

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஏனென்றால் மும்பை பிட்சில் இந்த உலக கோப்பை தொடரில் நடைபெற்றிருக்கும் நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டி மட்டுமே சேஸிங்கில் வெற்றி வந்திருக்கிறது. எஞ்சிய 3 போட்டிகளும் முதலில் பேட்டிங் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றிருக்கின்றன. இதனை மனதில் வைத்தே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் எடுத்தார்.

பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அணியே நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் களமிறக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றமாக டிம் சவுதி பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

 November 15, 2023

2019 ஆம் ஆண்டைப் போலவே இரு அணிகளும் 2023 உலக கோப்பை தொடரிலும் மோதுவதால் ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர். குறிப்பாக திரை நட்சத்திரங்கள் முதல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வரை என பலரும் வான்கடேவில் முகாமிட்டுள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர், கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம், தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் வான்கடே மைதானத்தில் நேரில் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

அதற்கேற்ப இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். நியூசிலாந்து அணியின் ஸ்டார் பவுலர்களான டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோரின் ஓவர்ளிலேயே சிக்சர் மழை பொழிந்து வருகிறார். வெறும் 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்திருப்பதுடன் உலக கோப்பையில் 50 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிறிஸ் கெயில் இதற்கு முன்பு 49 சிக்சர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.