நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு, தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில், அம்மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திட்டார்.
நம் நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகின்றன.
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பது, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் நீண்ட கால கோரிக்கை.
இதை, நியூயார்க் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளியான ஜெனிபர் ராஜ்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக நியூயார்க் சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு நியூயார்க் மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில், அம்மாகாண கவர்னர் கேத்தி ஹோச்சுல் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.
இது குறித்து, கவர்னர் கேத்தி ஹோச்சுல் கூறுகையில், ”பல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்களால் நியூயார்க் நிறைந்துள்ளது. இந்த பன்முகத்தன்மையை அங்கீகரித்து கொண்டாட, தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளேன்,” என்றார்.
நியூயார்க் சட்டசபை உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார் கூறுகையில், ”வரலாற்று சிறப்புமிக்க மசோதாவில் கையெழுத்திட்ட கவர்னருக்கு நன்றி. இதன் வாயிலாக, நியூயார்க்கில் வருங்கால சந்ததியினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவர்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement