லாரி ஓட்டுநரைக் கொன்று, பாலாற்றில் புதைத்த பகையாளிகள் – 10 நாள்களுக்குப் பிறகு கண்டுபிடித்த போலீஸ்!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகேயுள்ள அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் இளவரசன், லாரி ஓட்டுநராக வேலை செய்துவந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி, வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற இளவரசன், மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சிக்குள்ளான அவரின் தாய் செல்வி, காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதன்பேரில், வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கொலைசெய்யப்பட்ட இளவரசன்

இந்த நிலையில், இளவரசனை பீர் பாட்டிலால் குத்திக் கொலைசெய்து, பாலாற்றுக்குள் உடலைப் புதைத்துவிட்டதாக அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்ற லாலு (27), பூவரசன் (24), வாசுதேவன் (28), அருண்குமார் (33) ஆகிய நான்கு பேர், காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களைக் கைதுசெய்த போலீஸார், இன்றைய தினம் பாலாற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, உடலைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டச் சொன்னார்கள். அவர்களும் இடத்தைக் காட்டவே, வருவாய்த்துறையினர் முன்னிலையில், கொலைசெய்யப்பட்ட இளவரசனின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கொலையாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கொலையாளிகள் நான்கு பேரும் இளவரசனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், நண்பர்களாகப் பழகிவந்திருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ‘மயிலார்’ திருவிழாவின்போது, நான்கு பேருடனும் இளவரசனுக்குத் தகராறு ஏற்பட்டு, அவர்களுக்குள் பகை வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு லோகேஷ் உட்பட கொலையாளிகள் நான்கு பேரும் சேர்ந்து, மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற இளவரசனை வழிமறித்து, வம்பிழுத்து தகராறு செய்தனர். பிறகு, நான்கு பேரும் சேர்ந்து பீர் பாட்டில்களால் இளவரசனின் தலையில் அடித்து, உடைந்த பாட்டில்களின் கூர்மையான பகுதியால் வயிறு, மார்பில் சரமாரியாகக் குத்தியிருக்கின்றனர். இதனால், இளவரசன் நிகழ்விடத்திலேயே சுருண்டு விழுந்து, உயிரிழந்துவிட்டார்.

கொலையாளிகள்

இதையடுத்து, கொலையை மறைக்க திட்டமிட்ட நான்கு பேரும், இளவரசனின் உடலை பைக்கில் தூக்கிச் சென்று, பாலாற்றுக்குள் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டு, ஒன்றும் தெரியாதவர்களைப்போல அவரவர் வீடுகளுக்குச் சென்றிருக்கின்றனர். போலீஸாரின் விசாரணை அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கியதையடுத்து, ‘எப்படியும் கைதுசெய்யப்பட்டுவிடுவோம்’ என்ற அச்சத்தில், 10 நாள்களுக்குப் பிறகு அவர்கள் சரணடைந்திருப்பதும், விசாரணையில் தெரியவந்திருக்கிறது. விசாரணைக்குப் பிறகு, கொலையாளிகள் நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால், அத்திப்பட்டு கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.