“கிரிக்கெட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது” – பிரதமர் மோடி மீது சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் தாக்கு  

மும்பை: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி பாஜகவின் காட்சியாக மாறியுள்ளது என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு கடந்த அக்.5-ம் தேதி கோலாகலமாக அகமதாபாத்தில் தொடங்கியது. அதன் இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டியை காண்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் வருகை தர உள்ளனர். இவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இதுகுறித்து இருவரையும் சஞ்சய் ரவுத் கேலி செய்துள்ளார். விளையாட்டு தொடங்குவதற்கு முன்பாக ரவுத் கூறுகையில், ” உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று மோடி பந்து வீசலாம் அமித் ஷா பேட்டிங்க் செய்யலாம். பாஜக தலைவர்கள் பவுண்ட்ரி லைன்களில் நிற்கலாம். கிரிக்கெட்டில் அரசியலை கலக்கவேண்டிய தேவை இல்லை. ஆனால் அகமதாபாத்தில் அதுதான் நடக்கிறது.

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் பிரதமர் மோடியால் தான் உலகக் கோப்பையை வென்றோம் என்று நான் பின்னால் கேட்டாலும் ஆச்சரியப்பட மாட்டேன். இந்த காலத்தில் நாட்டில் எதுவும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் சுருவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி கிரிக்கெட்டை வைத்து அம்மாநில காங்கிரஸ் கட்சியைத் தாக்கியிருந்தார். அவர் கூறுகையில்,”கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் வந்து தனது அணிக்காக ஆடி ரன் சேர்க்கிறார். அதிகமான உட்கட்சி பூசல் இருக்கும் காங்கிரஸ் கட்சியில், ரன் எடுப்பதற்கு பதிலாக ஐந்து ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் ரன் அவுட் செய்யவே முயன்றனர். அவர்களின் அணி மோசமாக இருக்கும் போது அவர்கள் என்ன ரன் எடுப்பார்கள். அவர்கள் உங்களுக்காக என்ன வேலை செய்வார்கள்” என்று பிரதமர் கூறினார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் விவகாரத்தை அவர் குறிப்பிட்டு இவ்வாறு பேசினார்.

இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பின்னர் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இறுதி ஆட்டத்துக்குள் நுழைவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யச் சொல்லி பணித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஆஸ்திரேலியா அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.