India National Cricket Team: உலகக் கோப்பையை மீண்டும் ஒருமுறை நூலிழையில் தவறவிட்ட இந்திய அணி தற்போது அதில் இருந்து சிறிது சிறிதாக வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்த தோல்வியில் இருந்து மீள்வது கடினமானாலும் அடுத்தடுத்து வரும் டி20 உலகக் கோப்பை, 2025இல் வரும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்த கட்டத்திற்கு இந்திய வீரர்கள் நகர்ந்து வருகிறார்கள் எனலாம். உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), இஷான் கிஷன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் அரைசதம் அடித்தனர். அஸ்வின் தனது உலகக் கோப்பை அனுபவத்தை பகிர்ந்திருந்தார். இப்படி தொடர்ச்சியாக இந்திய அணி வீரர்கள் அதில் இருந்து மீள வழி பார்த்து வருகின்றனர்.
ரோஹித், விராட் கோலி ஆகியோர் டி20 அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் நீடிக்கிறது, மேலும், தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், அவரே தொடர்வாரா அல்லது வேறு யாரெனும் புதிதாக பயிற்சியாளராக வர உள்ளனரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கியமாக அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தின் (IPL Auction 2024) மீதான எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் ஐபிஎல் தொடரின் 10 அணிகளும் தாங்கள் வரவிருக்கும் தொடரில் விடுவிக்க உள்ள வீரர்கள், தக்கவைக்க உள்ள வீரர்களை இறுதிசெய்து அவர்களின் Rentention பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்தில் சமர்பிக்க வேண்டும்.
வீரர்களும், ரசிகர்களும் உலகக் கோப்பை இறுதிப்போட்டி (ICC World Cup 2023) தோல்வியை மறக்க பல வழிகளை யோசித்து வரும் நிலையில், இந்திய அணிக்காக இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை பெற்றுத்தந்த ஷமி (Mohammed Shami) உலகக் கோப்பை குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். உலகக் கோப்பையின் மீது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்தபடி வெளியிட்ட புகைப்படம் (Mitchell Marsh World Cup) குறித்தும் ஷமி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை நேற்று சந்தித்த முகமது ஷமி கூறுகையில்,”என் மனது காயம்பட்டுவிட்டது. உலகில் உள்ள அனைத்து அணிகளும் கைப்பற்ற போராடும் அந் கோப்பை, அதாவது உங்கள் தலைக்கு மேல் தூக்க விரும்பும் கோப்பை, அந்த கோப்பையில் கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,”பொதுவாக, பந்துவீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சென்று சரிபார்க்கிறார்கள். நான் ஒருபோதும் ஆடுகளத்திற்கு அருகில் செல்லமாட்டேன், ஏனென்றால் நீங்கள் பந்து வீசும்போதுதான் அது எப்படி செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் உங்களுக்கே நீங்கள் அழுத்தத்தை கொடுக்க வேண்டும்? எளிமையாக இருப்பதே நல்லது, உங்களை நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
மேலும் நீங்கள் நான்கு போட்டிகளுக்கு விளையாடாமல் பெவிலியனில் உட்காரும்போது, நீங்கள் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் அழுத்தத்தில் இருப்பீர்கள், ஆனால் அணி சிறப்பாக செயல்படுவதையும், நல்ல திசையில் செல்வதையும் நீங்கள் பார்க்கும்போது, அது உங்களுக்கு திருப்தி அளிக்கிறது” என்றார்.