சபரிமலை:நடப்பு மண்டல கால சீசன் தொடங்கிய பின்னர் சபரிமலையில் பக்தர்களை தொடர்ந்து பாம்பு கடிப்பதால் அவற்றை பிடிக்க வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலையில் மண்டல கால சீசன் தொடங்கும் போது வனத்துறை சார்பில் பாம்பு பிடிக்கும் வீரர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பாம்புகளை பிடித்து காடுகளுக்குள் கொண்டு விடுவது வழக்கம். இந்த ஆண்டு இதற்காக இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுஅவர்களும் தகவல் கிடைத்த இடங்களில் இருந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் மர கூட்டம் பகுதியில் மலை ஏறிக்கொண்டு இருந்த பக்தர்கள் இரண்டு பேரை அடுத்தடுத்த நாட்களில் பாம்பு கடித்தது. இதில் ஆறு வயது குழந்தையும் அடங்கும்.இருவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டனர். இந்நிலையில் கேரள தேவசம்போர்டு மற்றும் வனத்துறை அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதின்படி வனத்துறை சார்பில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் ,கூடுதல் பாம்பு பிடி நிபுணர்களை நியமிக்கவும் முடிவு செய்தனர். இதன்படி கூடுதல் ஊழியர்கள் நேற்று பம்பை மற்றும் சன்னிதானம் வந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று 69 ஆயிரத்து 741 பேர் ஆன்லைன் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement