அதிமுக பொதுக்குழு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் ஆட்சேபனை மனு

புதுடெல்லி,

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கே.குமரேஷ்பாபு மார்ச் 28-ந் தேதி உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக்கூடியவையே என தெளிவுபடுத்தி இருந்தார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது. அவ்வாறு தடை விதித்தால், அது தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரிய பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகிவிடும் எனக் கூறி, தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என ஆகஸ்டு 25-ந் தேதி தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம் சிவசங்கர் அக்டோபர் 5-ந் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் தனது தரப்புகருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகார வழக்கை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஒ பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்ற பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை தள்ளி வைக்கும் ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்கக்கூடாது என எடப்பாடி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.