படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம்

‛பருத்திவீரன்' படம் தொடர்பாக இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் ஒருவாரமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமீருக்கு ஆதரவாக தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜாவும் அமீருக்கு ஆதரவு தெரிவித்தும், ஞானவேல்ராஜாவிற்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை : “ஞானவேல், உங்களின் காணொளியை பார்த்தேன். பருத்திவீரன் படம் தொடர்பாக உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்னை சார்ந்தது மட்டுமே. ஆனால், நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்துக்கு முன்பு அமீர் இரண்டு படம் இயக்கி அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார். அவர், உங்கள் படத்தில்தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என் போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்.

உண்மையான படைப்பாளிகள் சாகும் வரை கற்றுக் கொண்டே ருப்பார்கள். நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும், அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்னையை சுமுகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.