சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசு 85 லட்சம் நிதி

சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் என்ற அமைப்பு தமிழக அரசின் நிதி உதவியுடன் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது.

இதில் 57 நாடுகளை சேர்ந்த 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், ராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், உடன்பால், விடுதலை பாகம் 1, வி3 ஆகிய 12 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. சென்னை பிவிஆர், ஐநாக்ஸ் சினிமாஸ் (சத்யம்), சாந்தம், சீசன், சிக்ஸ் டிகிரி, சேரின் ஸ்க்ரீன்ஸ், அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகிறது.

இந்த திரைப்பட விழாவுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு நிதி ஒதுக்கும். கடந்தகாலங்களில் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை ஒதுக்கி உள்ளது. 2015 வெள்ளம் புயல் பாதித்த ஆண்டில் நிதி எதுவும் ஒதுக்கவில்லை. கடந்த ஆண்டு 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், திரைப்பட பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.