விசாகப்பட்டினம், ஆந்திராவில், தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை கருகிய நிலையில், அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜகதாம்பா சந்திப்பில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு, 50க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றும், அதேபோல் ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மின்கசிவு காரணமாக இரண்டாம் தளத்தில் ஏற்பட்ட தீ, மருத்துவமனை கட்டடத்தின் பிற பகுதி களுக்கும் பரவியது. இதனால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சிஅளித்தது.
அங்கிருந்த நோயாளிகள் சிலர் அலறியடித்தபடி வெளியேறினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணியர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் எஞ்சியவர்களை பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் வாயிலாக அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில், மருத்துவமனையில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை கருகின.
விரைந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement