புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, ஆண்டுதோறும் அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட சைக்கிள் தரமற்றதாகவும், துருப்பிடித்து உடைந்தும் இருக்கின்றன என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் இலவச சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, முதல்வர் ரங்கசாமியிடம் மனு கொடுத்திருக்கிறார் புதுச்சேரி அ.தி.மு.கவின் மாநில செயலாளர் அன்பழகன்.
அன்பழகனிடம் பேசினோம், “புதுச்சேரி அரசின் மொத்த பட்ஜெட் நிதியில், 11 சதவிகிதம் அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனாலும் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள், மிதி வண்டிகள், லேப்டாப்கள், மழை கோட்டுக்கள், காலணிகள் போன்ற மாணவர்கள் நலன் சார்ந்த பொருள்கள் காலத்துடன் வழங்கப்படுவதில்லை.

அப்படி காலதாமதத்துடன் வழங்கப்படும் பொருட்கள், தரமானதாக இருக்கிறதா என்று அதிகாரிகளும் கவலைப்படுவதில்லை, சம்மந்தப்பட்ட அமைச்சரும் கவலைப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் படிக்கும் 7,034 மாணவ, மாணவிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2,356 மாணவ, மாணவிகள் என ஆண்டுதோறும் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த கல்வியாண்டில் 9,390 சைக்கிள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்காக மாநில அரசின் பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த தொகையில் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.5,000 மதிப்பில் தரமான சைக்கிள்களை வழங்கியிருக்கலாம். இந்த கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 9,390 மாணவர்களுக்கு, 9,390 சைக்கிள்களை வாங்க வேண்டிய அரசு, 12,000 தரமற்ற சைக்கிள்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன? இந்த சைக்கிள்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில், தரமற்ற, விற்பனை ஆகாமல் கொட்டி வைத்திருந்த சைக்கிள்களை, கண்டெய்னர் மூலம் வாரி எடுத்து வந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
ஏற்கெனவே `துருப்பிடித்தும், உடைந்தும் இருக்கும் சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் வழங்க மாட்டோம்’ என காரைக்காலில் சில எம்.எல்.ஏக்கள், அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர். சைக்கிள்கள் வாங்குவது குறித்து பெறப்பட்ட டெண்டரில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கோஹினூர் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலமே சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்கள், இரண்டே மாதத்தில் முழுமையாக துருப்பிடித்து, உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு தரமற்று கிடக்கிறது. இந்த சைக்கிள்களைப் பெற்ற மாணவர்கள், 1,000 ரூபாய்க்கும், 1,500 ரூபாய்க்கும் பழைய இரும்புகள் வாங்கும் கடைகளில் வேறு வழியில்லாமல் விற்றுள்ளனர். தரமற்ற இலவச அரிசியை உபயோகப்படுத்த முடியாமல் எப்படி மக்கள் குறைந்த விலைக்கு விற்கிறார்களோ, அப்படித்தான் இந்த தரமற்ற சைக்கிள்களின் நிலையும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள்கள், தரமானதா என்பதை எந்த அரசு அதிகாரியாவது ஆய்வு செய்தார்களா? சுமார் 5 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டுள்ள சைக்கிள்கள் உபயோகப்படுத்த முடியாமல் கிடப்பதற்கு பொறுப்பேற்கும் அதிகாரி யார்? அரசு துறைகளில் இதுபோன்ற தவறுகள் நடக்கும் போது, உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. அதனால் `முறைகேடு’ என்பது புதுச்சேரி அரசின் அங்கீகரிக்கப்பட்ட அங்கமாக இருக்கிறது. இந்த இலவச சைக்கிள் வழங்கப்படும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு, துறை ரீதியிலான விசாரணை நடத்த வேண்டும். அதனடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் முதல்வரிடம் மனு கொடுத்தேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.