ஜார்க்கண்டில் கடந்த நவம்பர் 15-ம் தேதி, `விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’ என்ற பெயரில், மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு பிரசார யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ‘நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் மத்திய அரசின் திட்டங்களை அவரவர் இருப்பிடத்துக்கே சென்று விளக்குவது, திட்டப் பயனாளிகளைச் சந்திப்பது, பயனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுதான் இதன் நோக்கம்.

அதன்படி, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ‘விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ துவக்க நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதனை, காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்துப் பேசினார். புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் இது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “பிரதமர் மோடி, நவம்பர் 15-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில், வளர்ந்த பாரதம் 2047 உறுதிமொழி யாத்திரையை தொடங்கி வைத்தார். பிரதமர் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு ரூ.6,000 சன்மானம் வழங்கும் திட்டம், 80 கோடி பேருக்கு அரிசி, பருப்பு வழங்கும் திட்டம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பிரதமர் இன்சூரன்ஸ் திட்டம், முத்ரா கடன் திட்டம், பீமா யோஜனா ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடல் செய்வது மற்றும் புதிய பயனாளிகளைச் சேர்ப்பது போன்றவைதான் இதன் நோக்கம்.

இந்த வாகனத்தில் ஆதார் கார்டு திருத்தங்கள், சேர்க்கை ஆகியவைகளையும் செய்ய முடியும். 2047-ல் பாரத நாடு உலகத்துக்கு வழிகாட்டியாகவும், வல்லரசு நாடாகவும் இருக்க இப்போதே அடியெடுத்து வைத்திருக்கிறோம். மக்கள் கடமையுடன், காலனித்துவ மனோபாவத்தையும் விட்டுவிட்டு சேவை செய்ய வேண்டும். புதுச்சேரியில் ஒவ்வொரு வார்டு வாரியாக இந்த வாகனப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
வாரிசாக பதவிக்கு வந்தவர் உதயநிதி. மழை நின்று 10 நாட்கள் ஆகின்றது. ஆனாலும் சென்னை புறநகரின் பல பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. வாரிசு அடிப்படையில் பதவிக்கு வந்திருப்பதனால்தான் `அப்பன் வீட்டுப் பணமா?’ என உதயநிதி கேட்கிறார். தேர்தல் மூலம் வந்திருந்தால் இதுபோன்று பேசியிருக்க மாட்டார். 2ஜி ஊழல், ஆற்றுமணல் ஊழல், ஏன் அவர்களது முன்னாள் நிதியமைச்சரே அவர்களின் குடும்பத்தின்மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருக்கிறார்.
ஒரே குடும்பத்திலிருந்து வந்ததால்தான், அவரின் எண்ணமும், செயல்களும், குடும்பத்தைச் சுற்றியே இருப்பதைத்தான் காட்டுகிறது. இந்தியா கூட்டணி உடைந்து போகும். அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் இணைந்து போட்டியிடுமா… மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுமா… டெல்லியில் ஆம் ஆத்மி காங்கிரஸ் இணைந்து போட்டியிடுமா… அகிலேஷ் யாதவ் அதிருப்தியில் இருக்கிறார்.
தமிழகத்தில் கூட்டணியில் இருந்து எப்போது வெளியில் வரலாம் என்று திருமாவளவன் காத்திருக்கிறார். இந்தியா கூட்டணியால் கூட்டம்கூட நடத்த முடியவில்லை. அதன் தலைவர்களிடம் ஒற்றுமையில்லை. மொத்தத்தில் அது ஒரு உருப்படாத கூட்டணி. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணியுடன் இணைந்து தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.

மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதைப் பொறுத்தவரை, இரண்டு நாடுகளுக்கிடையிலான பிரச்னை. மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க ஜி.பி.எஸ் கருவி கொடுத்திருக்கிறோம். அவர்கள் கைதுசெய்யப்படும் பட்சத்தில், தலையிட்டு அவர்களை மீட்டு வருகிறோம். மீனவர்கள் கைதுசெய்யப்படுவது முழுமையாக நிறுத்தப்பட, நாடுகளுக்கு இடையிலான கூட்டம் நடைபெற வேண்டும். அந்த அரசியல் சூழ்நிலைகளால் கூட்டம் நடத்தப்படாமல் இருக்கிறது” என்றார்.