காசியாபாத் உத்தர பிரதேசத்தில் தேநீர் தயாரித்து தர தாமதமானதால் கோபமடைந்த கணவன், தன் 50 வயது மனைவியை தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தரம்வீர் ஜாதவ், 52. கூலித் தொழிலாளியான இவர், தன் மனைவி சுந்தரி, 50, மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிக்கும் பழக்கத்தை உடைய தரம்வீர், நேற்று வழக்கம்போல் தன் மனைவியிடம் தேநீர் கேட்டுள்ளார்.
சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை அவர் தேநீர் கேட்டபோது தருவதாக கூறிய மனைவி சுந்தரி, அதை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தேநீர் கேட்டு 10 நிமிடங்களுக்கு மேலாகியும் தராததால் கோபமடைந்த தரம்வீர், சமையலறைக்கு சென்று தன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தேநீர் தருவது இன்னும் தாமதமாவது தெரிந்த உடன் கோபமடைந்த அவர், அங்கிருந்த வாள் போன்ற கூர்மையான ஆயுதத்தை எடுத்து, மனைவியின் பின்னால் நின்றபடி கழுத்தில் வெட்டினார்.
தலை வெட்டப்பட்டு சுந்தரி தரையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பதறியடித்து ஓடி வந்த குழந்தைகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தரம்வீரை கைது செய்தனர்.
இது குறித்து தரம்வீர் மகன் கூறுகையில், ”என் தந்தைக்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. நாள்தோறும் ஆறு முதல் எட்டு முறை அவர் தேநீர் குடிப்பார். அன்றும் அவர் தேநீர் கேட்டபோது, அதை தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் என் தாயை அவர் வெட்டி கொன்று விட்டார்.
”என் தாயை அவர் இதுவரை அடித்தது கூட கிடையாது. ஆத்திரத்தில் இவ்வாறு செய்வார் என நினைத்து கூட பார்க்கவில்லை,” என்றார்.
கைது செய்யப்பட்ட தரம்வீரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்