“அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்லாதவர்கள் இந்து விரோதிகள் அல்ல” – காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு செல்லாதவர்கள் இந்து விரோதிகள் அல்ல என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் பங்கேற்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ”கோயிலுக்குச் செல்வது என்பது தனிநபரின் முடிவுக்கு உட்பட்டது. தனிப்பட்ட முறையில் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தால், அது குறித்து அவர் தனிப்பட்ட முறையில் முடிவு எடுப்பார்.

என்னைப் பொருத்தவரை கோயில் என்பது ஓர் அரசியல் மேடை அல்ல. அது மக்கள் இறைவனோடு தங்களுக்கு உள்ள நெருக்கத்தை மேலும் அதிகரித்துக்கொள்வதற்கான, பிரார்த்தனை செய்வதற்கான இடம். எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனவே, நான் செல்வது குறித்த கேள்வியே எழவில்லை. கோயில் அரசியல் மேடையாக்கப்படுமானால், அங்கு பிரார்த்தனை செய்ய முடியாது. கோயிலுக்குச் செல்வது அங்கு மேற்கொள்ளப்படும் அரசியல் உரையை கேட்பதற்கானதாக இருக்க முடியாது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லப் போவதில்லை என சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார். காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியைப் போன்று நாத்திகவாத கட்சி அல்ல. அதேநேரத்தில், பாஜகவைப் போல இந்துத்துவ கட்சியும் அல்ல. பாஜக பின்பற்றும் இந்துத்துவம் என்பது அரசியல் கோட்பாடு. அதற்கும் இந்து மதத்துக்கும் தொடர்பு இல்லை. எங்களைப் பொறுத்தவரை நம்பிக்கை என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது. நான் ஒரு இந்து. என்னைச் சுற்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கலாம். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை அரசியல் சாசனம் முழு சுதந்திரத்தை நமக்கு அளித்திருக்கிறது.

அயோத்தி கோயில் விவகாரத்தில் கட்சி கூட்டாக ஒரு முடிவை எடுக்குமானால், அது அனைவருக்கும் தெரிவிக்கப்படும். தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2,3 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொறுத்தமான முறையில் பொறுத்தமான நேரத்தில் அவர்கள் முடிவெடுப்பார்கள். அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை அரசியலோடு முடிச்சிப் போடுவது சரியல்ல. ஒரு அரசியல் நிகழ்வுக்குச் செல்லாதவர் இந்து விரோதி ஆக மாட்டார். இவ்விஷயத்தில் பெட்டிக்குள் அடைப்பதைப் போன்று காங்கிரஸ் கட்சியை அடைக்க முடியாது. அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்துக்குச் செல்லாதவர்களை இந்து விரோதிகள் என முத்திரை குத்த முடியாது. இவ்விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களின் முடிவுக்கு விட்டுவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தருணத்துக்காகவே நாம் ஆண்டுக்கணக்கில் காத்திருந்தோம். ராமர் கோயில் என்ற கனவு தற்போது நனவாகி வருகிறது. யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் ஜனவரி 22ல் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். வேறு ஒரு தருணத்தில் செல்லலாம் என முடிவு செய்பவர்கள், அசவுகரியம் இல்லாமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.