இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமான பேட்டிங் வெளிப்படுத்திய டீன் எல்கர் 185 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய மார்கோ ஜான்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் ஆட்டம் தென்னாப்பிரிக்கா அணி வலுவான ரன்களை குவிக்க அடித்தளமிட்டது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும், தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது போலவே ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்கி ஆட்டமிழந்தனர். அவர்கள் பின்வந்த சுப்மன் கில், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து நிலைத்து நிற்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 26 ரன்களுக்கு மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் இழந்திருப்பது இந்திய அணிக்கு இந்த டெஸ்டில் பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இரண்டு பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய ஸ்கோர் அடித்தாக வேண்டும். குறைந்தபட்சம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 250 ரன்களுக்கு மேல் லீட் கொடுத்தால் மட்டுமே இந்திய அணி வெற்றியை குறித்து சிந்திக்க வாய்ப்புள்ளது. அதற்கு பேட்டிங்கில் நல்ல ரன்களை அடித்தாக வேண்டும். இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியிருப்பதால் நிச்சயம் இப்போட்டி முடிவை நோக்கி மட்டுமே நகரும். அப்படி பார்க்கும்போது, தென்னாப்பிரிக்காவின் கை இந்த டெஸ்டில் ஓங்கி இருக்கிறது. வெற்றிக்கான வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாக இருக்கிறது என்றே கூறலாம்.
இந்தியாவை தவிர வெளிநாட்டு மைதானங்களில் ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவதில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. அதனை நிரூபிக்கும் வகையிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் அவருடைய பேட்டிங்கும் இருந்தது. இரண்டு இன்னிங்ஸிலும் மிகமிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார் அவர்.