நடிகர், நடிகர் சங்கத் தலைவர், கட்சித் தலைவர் என பன் முகங்களோடு மக்களின் இதயங்களை வென்ற விஜயகாந்த் (71) இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.
அவரின் மறைவிற்கு திரையுலகத்தினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் விஜயகாந்த்தின் ‘நெறஞ்ச மனசு’ மனசு படத்தை இயக்கிய சமுத்திரக்கனி விஜயகாந்த்தின் மறைவு குறித்து மிகுந்த வருந்தத்துடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சமுத்திரக்கனி, “கேப்டன், நான் சமுத்திரக்கனி பேசுறேன். உங்க மனசுக்குத்தான் படத்திற்கு ‘நெறஞ்ச மனசு’னு தலைப்பு வைச்சேன். உங்களோடு பயணப்பட்ட அந்த 72 நாட்கள் மறக்க முடியாதது. ஒரு மாபெரும் சக்தியோடு இருந்த மாதிரி இருந்தது. அந்த நினைவுகள் இன்னைக்கும் பசுமையான நினைவுகளா என் மனசுக்குள்ள இருக்கு கேப்டன். இன்னைக்கு நீங்க இல்லைன்னு சொல்றாங்க. அத என் மனசு நம்ப மறுக்குது. என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். எங்களுக்குள்ளையே நீங்க இருக்கிங்க கேப்டன். உங்களுடைய நல்லெண்ணம், இந்த சமூகத்தின் மீது நீங்க வச்சிருந்தப் பார்வை எல்லாமே எனக்குத் தெரியும். அத நாங்களும் முன்னெடுக்குறோம் கேப்டன். உங்களின் மறைவு ரொம்ப கஷ்டமா இருக்கு கேப்டன்” என்று மிகுந்த வருத்தத்துடன் பேசியுள்ளார்.