47 நாட்கள் ரேச்சலாக வாழ்ந்தேன்: ஹனி ரோஸ்

முன்னணி மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழில் முதல் கனவே என்ற படத்தில் அறிமுகமாகி பின்னர் சிங்கம்புலி, கந்தர்வன், மல்லுகட்டு படங்களில் நடித்தார். அவர் நடித்த 'சரித்திரம்' என்ற படம் வெளிவரவில்லை. சில ஆண்டுகள் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர், அதன் பிறகு தெலுங்கு படங்களில் என்.டி.பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்து மீண்டும் பிசியானார்.

தற்போது அவர் நடித்து வரும் மலையாள படம் 'ரேச்சல்'. முதன் முறையாக சோலோ ஹீரோயினாக ரேச்சல் என்ற டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. ஆனந்தினி பாலா இயக்கும் இதில் கலாபவன் சஜோன், பாபுராஜ், ஜாபர் இடுக்கி, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் தயாரானாலும் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு இப்போது முடிந்துள்ளது.

இதுபற்றி ஹனி ரோஸ் கூறும்போது “இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட கடந்த 47 நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத அத்தியாயமாக மாறியிருக்கிறது. 47 நாட்களும் நான் ரேய்ச்சலாக வாழ்ந்தேன். இந்த பான் இந்தியா படத்தில் நடித்தது, தனித்துவமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. கதாநாயகியாக 18 வருடங்கள் நடித்துவிட்டேன். ஆனால், ஆனந்தினி பாலா இயக்கத்தில் நடித்தது, பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.