மறைந்த நடிகர் விஜயகாந்தைப் பற்றி `வல்லரசு’ படத்தின் இயக்குநர் N.மகாராஜன் தன் இரங்கலைப் பதிவு செய்திருக்கிறார். நம்மிடையே பேசிய அவர்,
”விஜயகாந்த் சாரோட ‘வல்லரசு’ படத்தில் நான் அறிமுக இயக்குநர். இந்தப் படத்துக்கு முன்னாடி கேப்டன், 120 படங்களுக்கு மேல நடிச்ச, பெரிய சூப்பர் ஸ்டார். நானோ, இந்தப் படத்துக்கு முன்னாடி கதாசிரியர். ரைட்டர் ஆக இருந்தாலும், முதன் முதலா படம் இயக்குகிறேன் என்றதும், லேசா படபடப்பாகிடுச்சு. என் பயத்தைப் பார்த்த அண்ணன் கேப்டன், ‘உன்னால பண்ண முடியும். தைரியமா பண்ணு’னு தோள்ல தட்டிக் கொடுத்து, என் பயத்தைப் போக்கினார். முதல் நாள் பூஜையுடன், படப்பிடிப்பும் ஆரம்பிக்கிற நாள். அரசியல் தலைவர்கள் தொடங்கி பல விஐபிகள் பூஜைக்கு வந்திருந்தாங்க. ஆனா, பூஜை அன்னைக்கு மாங்காடு கோவிலுக்கு நான் குடும்பத்தோட பூஜை பண்ணப் போயிருந்தேன். படப்பூஜை 9 மணிக்கு இருந்தது. மாங்காடுல பூஜையை முடிச்சிட்டு, என் படப்பூஜைக்கு சரியான நேரத்துல வந்திட முடியும்னு நினைச்சேன். ஆனா, வழியில ட்ராஃபிக் ஜாம்னால 11 மணி ஆகிடுச்சு. எனக்கு பயமாகிடுச்சு.

அன்னிக்கு காலகட்டத்துல கேப்டன் சூப்பர் ஸ்டார். நான் அறிமுக இயக்குநர். பூஜைக்கு விஐபிக்கள் காத்திருப்பாங்க. கேப்டன் என்ன சொல்வாரோ என பயந்துக்கிட்டே பூஜை நடக்கற இடத்துக்கு வர்றேன். ஆளாளுக்கு டைரக்டரை காணோம்னு சொல்றது என் காதுக்களுக்கும் கேட்க, பயம் இன்னும் அதிகமாகிடுச்சு. அங்கே என்னைப் பார்த்த கேப்டன், ‘வாப்பா, கோயிலுக்கு போயிட்டு வர்றீயா.. யாராவது வந்து எதுவும் கேட்டுடப்போறாங்க. அதுக்கு முன்னாடி நீ பேப்பரை எடுப்பா.. டயலாக்கை சொன்னா, டேக் போயிடலாம்’னு என்கிருந்த முழு பயத்தையும் போக்கிட்டார்.
எதுவும் யோசிக்காமல் அன்னிக்கு எழுதின டயலாக். ‘வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கறவங்களுக்கு நான் என்னிக்கும் பக்கப் பலமா இருப்பேன். உங்கள் எண்ணங்கள் வெற்றிப்பெற வாழ்த்துகள்’னு ஒரு டயலாக் எழுதி சென்டிமென்ட்டா அன்னிக்கு ஷூட் பண்ணினேன். அவருக்கு இந்த டயலாக் ரொம்பவும் பிடிச்சிடுச்சு. ‘படத்துலேயும் இதை வச்சிடுங்க ராஜா’னு சொன்னார்.

ஒரு பெரிய நடிகர்னு என்னைக்கும் அவர் உணர்ந்ததில்ல. அதனாலதான் அவரால 60 இயக்குநர்களை உருவாக்க முடிஞ்சது. 60 தயாரிப்பாளர்களையும் உருவாக்கினார். இன்னிக்கெல்லாம் ஒரு பெரிய ஹீரோக்கிட்ட ஒரு புது இயக்குநர் கதை சொல்வதோ, அவரை வச்சு படம் இயக்குவதோ சாதாரண விஷயம் கிடையாது. ஆனா, கேப்டன் ரொம்ப சாதாரணமானவரா இருந்தார். சமமா பழகுவார். அவரோட அதீத அன்பே, எனக்கு ஒரு கட்டத்துல பயமா மாறியிருக்கு. கேப்டனுக்கு கோபம் வந்தாலும், அந்த விநாடிதான் நிற்கும். அதன்பிறகு அதை மறந்தே போயிடுவார்.
இன்னொரு சம்பவம். ‘வல்லரசு’ கிளைமாக்ஸ் காட்சியை மவுண்ட் ரோட்டுல எடுத்துகிட்டு இருந்தோம். ரொம்பவே பெரிய கூட்டத்தை வச்சு, படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கு. காலையில 10 மணிக்குள் படப்பிடிப்பை முடிச்சிடணும்னு நினைச்சோம்.
ஆனா, நாங்க அங்கே போனதே, காலையில 9 மணிக்குத்தான் எனும் போது, படப்பிடிப்பு நீண்டது. காலையில பத்து மணிக்கெல்லாம் அப்போதைய முதல்வர் கலைஞர், மவுண்ட் ரோடு வழியாகத்தான் சட்டசபைக்கு போவார் என்பதால் எல்லாரும் பதறிட்டோம். ஏன்னா, கூட்டம் இன்னும் அதிகா இருக்கு. நான் இன்னும் பதறுறேன். விஜயகாந்த் சார், ‘பதறாதீங்க.. நான் தலைவர்கிட்ட பேசிக்கறேன். ஷூட்டிங் முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்’னு கேட்டதோடு, கலைஞருக்கு தைரியமாக போன் பண்ணவும் செய்தார். கலைஞரோட உதவியாளர் சண்முகநாதன் சார்கிட்ட போன் செய்து, ‘தலைவர் எத்தனை மணிக்குக் கிளம்புவார்’னு கேப்டன் கேட்கிறார். அப்படி ஒரு நட்பு. கேப்டனை கலைஞர் அவர்கள் ‘விஜி’னு தான் சொல்லுவார். போனில் சண்முக நாதனுடன் விஜயகாந்த் பேசுவதைக் கண்டதும், ‘போனில் யாரு விஜியா.. போனைக் குடு’னு கலைஞர் கேட்டு வாங்கிப் பேசுறார். ‘சரி விஜி, நீ நடி.. சீனை ஷூட் பண்ணிக்கோ; நான் ரூட்டை மாத்திப் போயிக்கறேன்’னு சொல்லி, கலைஞர் வேறு பாதை வழியாகக் கோட்டைக்குப் போனார். கலைஞர்கிட்டேயும் அப்படி ஒரு நட்போடு இருந்தார். இதெல்லாம் யாருக்கும் அமையாத பாக்கியம்.

கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லைனதும், எனக்குத் தெரிந்த நல்ல மருத்துவர்களை அழைச்சிட்டு போய் அவருக்கு வைத்தியம் செய்து பார்த்தேன். ஆனாலும் சரிவரல. என் பசங்களோட கல்யாணத்துக்கு அவரால வரமுடியல. நான் அவர் வீட்டுக்கு போய் அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்தேன். என் மகனை கதாநாயகன் ஆக்க முயற்சி பண்ணிட்டிருந்ததைக் கேள்விப்பட்டு, ‘நான் கெஸ்ட் ரோல் பண்ணுறேன். நடிச்சுத் தாரேன். என்ன கேரக்டர்னு மட்டும் சொன்னாப் போதும்’னு சொன்னார். அண்ணன் கேப்டன், இன்று நம்மோடு இல்லைங்கறது வருத்தமா இருந்தாலும், அவரை ஒரு அவதாரமாகத்தான் பாக்குறேன்.” எனக் கலங்குகிறார் இயக்குநர் மகாராஜன்.