Vijayakanth: `50 வகை மீன்; அண்டா அண்டாவாக சாப்பாடு; தவித்த படக்குழு; பசி தீர்த்த கேப்டன்!' – வெற்றி

விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’, ‘வாஞ்சிநாதன்’, ‘தவசி’, ‘தர்மபுரி’ ஆகிய படங்களின் இணை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் வெற்றி. மறைந்த விஜயகாந்த் உடனான தன் நினைவுகளை கனத்த இதயத்துடன் பகிர்கிறார் இங்கே!

”திரைப்பட கல்லூரி மாணவர்கள் மீது தனி மதிப்பு வைத்திருப்பவர் கேப்டன். நானும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன் என்பதால் இனிமையாகப் பழகுவார். நான் ஒளிப்பதிவாளர் சரவணன் சார் ஒளிப்பதிவு செய்த ‘வல்லரசு’, ‘வாஞ்சிநாதன்’, ‘தவசி’, ‘தர்மபுரி’ படங்கள்ல இணை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தேன்.

விஜயகாந்த்

விஜயகாந்த் சார் படங்கள்ல ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்னாலே சிறப்பா இருக்கும். அந்த காலத்திலேயே மூணு, நாலு கேமராக்கள் வச்சு எடுத்திருக்கோம். அப்ப ஃபிலிம்னால, நான் கேமராவைக் கையாளும்போது ஒரு வித பயம் இருக்கும். ஆனா, கேப்டனோ, ‘நீங்க சரியா பண்ணிடுவீங்க’னு சொல்லி, எனக்கு தைரியம் கொடுத்துட்டுப் போவார். அப்பவெல்லாம் கேரவன் வசதி கிடையாது. கேமரா பக்கம் இருக்கற சின்ன ஸ்டூல்ல தான் அவர் உட்கார்ந்திருப்பார்.

Vijayakanth

அவரோட படங்கள்னாலே பொது இடங்கள்ல தான் படப்பிடிப்பு நடக்கும். ஷூட்டிங்னாலே வேடிக்கை பார்க்கற கூட்டமும் அதிகமாகிடும். இன்னிக்கு பவுன்சர்கள் வச்சு, கூட்டத்தை கண்ட்ரோல் பண்றாங்க. இந்த செட்டப் அப்ப கிடையாது. விஜயகாந்த் சார் படப்பிடிப்புனாலே கூட்டம் இன்னும் அதிகமாகிடும். ஆனாலும், அவ்வளவு கூட்டத்தையும் அவர் அழகா கையாள்வார்.

‘நீங்க எல்லாரும் இந்தப் பக்கமா இருந்து வேடிக்கை பாருங்க.. நாங்க அந்தப் பக்கமா நடிக்கறோம்’னு அவங்ககிட்ட சொல்லுவார். அவ்ளோ ஜனங்களும் அவர் சொன்ன இடத்துல அழகா போய் நின்னு, படப்பிடிப்புக்கு தொந்தரவு இல்லாமல் வேடிக்கை பார்ப்பாங்க. அவர் சொல்லுக்கு கூட்டம் கட்டுப்படும்.

விஜயகாந்த்

‘தர்மபுரி’ படப்பிடிப்பில் நடந்த ஒரு விஷயம் நல்லா ஞாபகத்துல இருக்கு. காரைக்குடி பக்கம் உள்ள சினனச் சின்ன கிராமங்கள்ல படப்பிடிப்பு. அந்தப் படத்தின் தயாரிப்பு தரப்பில் ஒரு சிக்கல்னால யூனிட்ல வேலை செய்த யாருக்குமே சாப்பாடு வரல. ‘எங்க யாருக்கும் சாப்பாடு சரியா கொடுக்கப்படல’ என்கிற தகவல் எப்படியோ விஜயகாந்த் சார் காதுக்கு போயிடுச்சு. அந்த சமயத்துல அவர் கட்சியும் ஆரம்பிச்சிருந்தார். உடனே அவர் தன் கட்சிக்காரங்ககிட்ட சொல்லிட்டார். அவ்ளோதான், விதவிதமான வகைகளில் சாப்பாடு வந்து குவிஞ்சிடுச்சு. மீன் கறி வகைகளிலேயே 50 வெரைட்டி வந்திருக்கும். என்னோட வாழ்க்கையில அவ்ளோ வெரைட்டியா மீன்கள் கிடைக்கும்னு தெரியவே தெரியாது. சப்பாடும் அண்டா அண்டாவா வந்திடுச்சு.

இன்னொரு மறக்கமுடியாத விஷயம், அவர் கட்சிக் கொடியை முதன் முதலாக ‘வல்லரசு’ படத்தில ஒரு பாட்டுல கொடியை அறிமுகப்படுத்தும் விதமாக ஷாட் இருக்கும். அப்போது நான் அங்கே இருந்ததைப் பெருமையா நினைக்கறேன். ‘வாஞ்சிநாதன்’ படப்பிடிப்பு நியூசிலாந்துல நடந்துச்சு. யூனிட்லேயே ரொம்ப சின்ன பையனா இருந்ததால, என் தோள்மீது கைபோட்டு உரிமையா பேசுவார். நலம் விசாரிப்பார். அவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி, கடின உழைப்பு கைகொடுக்கும் என்பதை அண்ணனா இருந்து அட்வைஸ் பண்ணியிருக்கார். பொதுவா ஹீரோக்களுக்கு லைட்மேன்கள், கிரேன்மேன்களோட பழக்கம் இருக்காது. ஒளிப்பதிவாளர்கள் தான் அவங்களோட வேலைல இருப்பாங்க. இவர் ஒவ்வொருத்தர் பெயரையும் சொல்லிக் கூப்பிடுவார். இதனால லைட்மேன்கள், கிரேன் ஆட்கள் எல்லாருமே உற்சாகமா வேலை செய்வாங்க.

ஒளிப்பதிவாளர் வெற்றி

அதைப் போல ‘வல்லரசு’ பட வெற்றிவிழாவில் அவர் கையால ‘வி’னு பெயர் பொறித்த மோதிரம் கொடுத்தார். இன்னமும் அதை பொக்கிஷமா பாதுகாத்து வச்சிருக்கேன். ஒவ்வொரு புதுவருஷம் அன்னிக்கும் படப்பிடிப்பு இருக்கணும்னு விருப்புவார். அதைவிட அவர் தன்னை சந்திக்க வர்றங்களுக்கு புது நூறு ரூபா நோட்டு கொடுத்து வாழ்த்துவார். பல வருஷம் அப்படி நியூ இயர் அன்னிக்கு அவர்கிட்ட நூறு ருபாய் வாங்கியிருக்கேன். கேப்டனை புது வருஷம் அன்னிக்கு சந்திச்சு வாழ்த்தும், அவர் கையால நூறு ரூபாய் பணம் வாங்குறதை பாசிஸ்ட்டிவான சென்டிமென்ட் ஆக நினைப்பாங்க. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவரை சந்திக்கற வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சு. ஒரு நல்ல மனிதரை இழந்தது, தனிப்பட்ட முறையில் பேரிழப்பா இருக்கு” – நெகிழ்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.