அமெரிக்க அதிபர் தேர்தல்.. மேலும் ஒரு மாநிலத்தில் டொனால்டு டிரம்புக்கு தடை

வாஷிங்டன்:

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாநில கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாநில கோர்ட்டு டிரம்பை தகுதிநீக்கம் செய்து தீர்ப்பளித்தது. அத்துடன், கொலராடோவில் குடியரசு கட்சியின் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் டிரம்பின் பெயர் இருக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

கொலராடோவைத் தொடர்ந்து மைனே மாநிலத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மைனே வெளியுறவுத்துறை மந்திரி ஷென்னா பெல்லோஸ் கூறும்போது, “குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாநிலத்தில் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. நாடாளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன” என்றார்.

டிரம்ப் போட்டியிட தகுதியானவரா? இல்லையா? என்பதை நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய உள்ள நிலையில், மைனே மாநிலம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது பிரச்சார பிரிவு செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.