தமிழக அரசு உட்பட அனைவருக்கும் நன்றி: பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்

சென்னை: கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முடிந்த பின்னர், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா, தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்குக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது நன்றி. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தலைமை அலுவலகம் வரை 14 கிமீ தூரம் நடந்த இறுதி ஊர்வலத்தில், வழிநெடுக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய அத்தனை தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் என் நன்றி.

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு தலைவருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெருமை விஜயகாந்துக்கு கிடைத்திருக்கிறது. புள்ளிவிவரங்களின் படி கடந்த 2 நாட்களில் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதற்கு விஜயகாந்த் செய்த தர்மமும், அவருடைய நல்ல எண்ணமும், குணமும்தான் காரணம்.

அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல், சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்தின் கைவிரலில் இருக்கும் கட்சி மோதிரம் அகற்றப்படவில்லை. இன்று நாம், நம் தலைவரை இழந்திருக்கிறோம். இந்நாளில் நம் தலைவரின் கனவை அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயமாக வெற்றிபெறச் செய்து, அந்த வெற்றிக்கனியை அவரது பாதத்தில் சமர்ப்பிக்கும் நாள்தான் தேமுதிகவுக்கு உண்மையான வெற்றி நாள் என்பதை சூளுரைப் போம்.

கடற்கரையில் தலைவர்களுக்கு சமாதி அமைக்கப்பட்டுள்ளது போல தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்துக்கு சமாதி அமைக்கப்படும். ஒட்டுமொத்த தொண்டர்களும் வந்து வழிபடக்கூடிய கோயிலாக அது இருக்கும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ளீர்கள். எப்படி கேப்டன் விஜயகாந்த் சொல்வாரோ, அதேபோல்தான் உங்கள் அண்ணியும் சொல்கிறேன். தொண்டர்கள் பத்திரமாக வீடுபோய் சேர வேண்டும். வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். நமது முரசு வெற்றி முரசாக தமிழகம் முழுவதும் ஒலிக்கச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.