சென்னை: எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை சரிபார்க்க, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஜன.19-க்கு தள்ளிவைத்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சரிபார்ப்பு இயந்திரங்களை இணைத்து, அதில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண உத்தரவிட்டால் மட்டுமே வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதுள்ள சந்தேகங்கள் நிவர்த்தியாகும்.
ஏனெனில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் 216 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளைவிட சரிபார்ப்பு இயந்திரங்களில் அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. 126 தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட குறைந்த வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன’ என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுதொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.19-க்கு தள்ளி வைத்துள்ளனர்.