ஹீரோ ஆனார் பீட்டர் ஹெய்ன்

சண்டை இயக்குனர்கள் சினிமாவில் ஹீரோ ஆவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் ஹீரோக்களாக ஆகி இருக்கிறார்கள் அந்த வரிசையில் அடுத்து வருகிறார் பீட்டர் ஹெய்ன். இந்திய சினிமாவின் முன்னணி சண்டை இயக்குனராக பணியாற்றி வரும் பீட்டர் ஹெய்ன் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

பீட்டர் ஹெய்ன் நடிக்கும் படத்தை ரெண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் மற்றும் எம்.டி சினிமாஸ் சார்பில் ஏ.எம் சவுத்ரி தயாரிக்கிறார்கள். மா.வெற்றி என்ற புதுமுகம் இயக்குகிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எம்.பஷீர் கூறியதாவது: நானும் என் நண்பர் சவுத்ரியும் இணைந்து மாஸ்டர் பீட்டர் ஹெயினை வைத்து ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படம் எடுக்க வேண்டும் எனப் பல காலமாகப் பேசி வந்தோம். இந்தியாவில் உருவான பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் மாஸ்டரின் பங்கு உள்ளது. உலகளவில் இந்திய சினிமாவை அறிய வைத்தவர், அவரை கவுரவிக்க வேண்டும் என ஆசைப்பட்டோம். இவரை வைத்து பெரிய அளவில் ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளோம். படம் மிகப்பெரும் பொருட்செலவில் முன்னணி கலைஞர்களுடன் உருவாகவுள்ளது. எங்களுக்கு இயக்குனர் வெற்றியை ரொம்ப காலமாகத் தெரியும். அவர் மாஸ்டரை கவரும்படி ஒரு கதையைச் சொல்லியுள்ளார். சினிமாவில் உலகளவில் மொழிகள் தாண்டி ரசிக்கப்படுவது ஆக்ஷன் படம், காமெடிப்படம். அந்த வகையில் மாஸ்டரை வைத்து பெரிய ஆக்ஷன் படம் தயாரிக்கவிருக்கிறோம். உலகமே வியக்கும் சாதனைகள் செய்த மாஸ்டர் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.