வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் சீனாவின் ஆய்வு கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்ததால், இலங்கையின் கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் நுழைவதற்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள கொழும்பு துறைமுக பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி என்ற பெயரில் சீனாவின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வந்தன. கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவின் ஷி யான் 6 எனும் கப்பல், கொழும்பு துறைமுகத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதே போல் 2022ல் யுவான் வாங் 5 எனும் சீன கப்பல், இலங்கையின் தெற்கே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும், நிலைகளையும் கண்காணிக்க இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை இந்தியா தொடர்ந்து எழுப்பி வந்தது.
இந்நிலையில், தற்போது வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள், தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் வருவதற்கு, இலங்கை ஓராண்டு தடை விதித்துள்ளது.
இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிலுக கதுருகமுவ கூறுகையில், “வெளிநாட்டு ஆய்வு கப்பல்களுக்கான தடைக்காலம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.”இந்த கால கட்டத்தில் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்த முடியும்.” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement