கெஸ்ட் ரோலில் நடிப்பது எனது படங்களை பாதிக்கிறது : விஜய் சேதுபதி எடுத்த முடிவு

விஜய்சேதுபதி நடித்துள்ள படமான 'மெரி கிறிஸ்துமஸ்' வருகிற 12ம் தேதி வெளிவருகிறது. இதன் புரமோசன் நிகழ்வுகளில் தீவிராக பங்கேற்று வருகிறார் விஜய் சேதுபதி. இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய்சேதுபதி, “இனி வில்லன் வேடத்திலும், சிறப்பு தோற்றத்திலும் நடிக்கப்போவதில்லை” என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வில்லன் கதாபாத்திரம் மற்றும் கவுரவ வேடங்களில் என்னை நடிக்க வைக்க முயற்சிப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். நான் வேண்டாம் என்று சொன்ன கவுரவ வேடங்களே 20க்கும் கூடுதலாக இருக்கும். ஒருகட்டத்துக்கு மேல் நான் அதை தவிர்த்து விட்டேன். நாம் நடிப்பதால் அந்த படத்துக்கு கவனம் கிடைக்கிறது, அதில் ஒன்றும் தவறு இல்லையே என்று முன்பு எனக்கு ஒரு பார்வை இருந்தது. ஆனால் அது அதிகமாக வர தொடங்கியதும் அதற்கு நோ சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தையே அது பாதிக்கிறது.

வில்லனாக நடிப்பதும் கூட நிறைய பேர் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல அது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தை நோக்கி போகிறது. வேண்டாம் என்று சொன்னாலும் கதையை கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்க இயலவில்லை.

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.