புதுடெல்லி: ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை என்றும், இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் பூரி சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விழா சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இது ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சி என்பதால் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதையொட்டி, நாட்டின் முக்கிய இந்து மதத் தலைவர்களில் ஒருவரும், ஒடிசாவில் அமைந்துள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை. இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
பிரதமர் மோடி கருவறையில் இருந்து சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வார். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது, அதாவது இந்த நிகழ்வுக்கு ஏதோ ஓர் அரசியல் கோணம் கொடுக்கப்படுகிறது. கண்ணியமான முறையில் இந்த நிகழ்வு நடத்தப்பட வேண்டும். நான் அதை எதிர்க்கவும் இல்லை, அதில் கலந்து கொள்ளவும் மாட்டேன். நான் எனது கருத்துகளை முன்வைத்துள்ளேன், அனைத்து நிகழ்வுகளும் சுமுகமாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.