5ம் ஆண்டில் பேட்ட : ரஜினி குறித்து நெகிழும் மாளவிகா மோகனன்

கடந்த 2019ல் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட திரைப்படம் வெளியானது. நேற்று இந்த படம் வெளியாகி ஐந்தாம் வருடத்தை எட்டியது. முழுக்க முழுக்க ஒரு ரஜினி ரசிகனாக இருந்து கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் நடித்த பலருக்கும் ஒரு அடையாளத்தை கொடுத்தது.

அதில் ஒருவர் தான் மலையாள நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துவிட்டு அதன் பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்த நிலையில் தான் இவருக்கு தமிழில் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாகவும், ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் எளிதாக நுழைந்த மாளவிகா மோகனன் அடுத்தடுத்து விஜய், தனுஷ், தற்போது விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு மாறிவிட்டார், இந்த நிலையில் பேட்ட படம் ஐந்தாவது வருடத்தை தொட்டுள்ளது குறித்து அவரும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு மிக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறும்போது, “இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் சிறுவயதிலிருந்து நான் யாரை பார்த்து வளர்ந்தேனோ அந்த ரஜினி சாருடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்பதால்தான். புதிய திரை உலகம், புதிய நட்சத்திரங்கள் என முதல் நாளே டென்ஷனாக இருந்த எனக்கு ரஜினி சாருடன் முதல் காட்சியிலேயே நடிக்க வேண்டி இருந்தால் எப்படி இருக்கும் ? ஆனால் செட்டிற்கு வந்த ரஜினிகாந்த்திடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்த அந்த சமயத்தில் இருந்து ஒவ்வொரு ஷாட்டும் எடுத்து முடிக்கும் போதெல்லாம் என்னிடம் அவர் நிறைய பேசி, என்னை பற்றி, என் குடும்பத்தை பற்றி விசாரித்து, என்னிடம் இருந்த டென்ஷனை முற்றிலுமாக குறைத்தார்.

இத்தனைக்கும் நான் அந்த படத்தில் அவருக்கு ஜோடியும் இல்லை. அவர் அப்படி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் அன்று மட்டுமல்ல, அந்தப் படத்தில் அவருடன் நடித்து முடிக்கும் நாள் வரை அவர் என்னிடம் காட்டிய எளிமையும் பரிவும் என்றுமே மறக்க முடியாதது. குறிப்பாக இந்த படத்தில் என்னுடைய தந்தை இறந்து போன காட்சியில் நான் நடித்தது கண்டு முதன்முதலாக எனக்கு கைதட்டல் கிடைத்தது ரஜினி சாரிடம் இருந்துதான். அதேபோல இந்த படம் வெளியானதும் நீ மிகப்பெரிய முன்னணி நடிகையாக மாறுவாய் என்று முதன்முதலாக கூறியதும் அவர்தான்.

புதிதாக வந்த ஒரு நடிகைக்கு தொடர்ந்து உற்சாகப்படுத்தும் விதமாக வார்த்தைகளை கூறி பதட்டத்தை போக்கிய ஒரே மனிதரும் அவர்தான்.. ரஜினி சார்.. நீங்கள் உண்மையிலேயே ஒரு மேன்மையான மனிதர்.. ஐ லவ் யூ சோ மச் இந்த பேட்ட படமும் என் மனதிற்கு மிக நெருக்கமான படமாக எப்போதும் இருக்கும்” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.