தைபே,: தைவானுடனான துாதரக உறவை நவ்ரு நாடு துண்டித்ததை அடுத்து அதன் துாதரக நட்பு நாடுகளின் எண்ணிக்கை 12ஆக குறைந்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்நாட்டு கடல் எல்லையில் தங்கள் போர் கப்பல்கள் விமானங்கள் வாயிலாக சீனா மிரட்டல் விடுத்து வருகிறது.
தைவானில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி துணை தலைவர் லாய் சிங் டே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சீன ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியைச் சேர்ந்த ஹவ் யொஹி தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தைவானுடன் உறவில் இருந்த பசிபிக் தீவு நாடான நவ்ரு அந்நாட்டுடனான தங்கள் துாதரக உறவுகளை நேற்று துண்டித்ததுடன் சீனாவை அங்கீகரித்துள்ளது.
இது குறித்து நவ்ரு நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நவ்ரு இனி தைவான் குடியரசை அங்கீகரிக்காது. மாறாக அது சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. இனி தைவான் உடனான துாதரக உறவை முறித்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவுடன் மீண்டும் உறவை ஏற்படுத்துவதே சிறந்த முடிவாக கருதப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவான் அதிபர் தேர்தலுக்குப் பின் அந்நாட்டுடனான நட்புறவை முறித்துக்கொண்ட முதல் நாடாக நவ்ரு விளங்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement