வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் அதிபர் டிரம்புக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. முன்னதாக, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும், ‘காகஸ்’ எனப்படும் மாகாண அளவிலான உள்கட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். பாரம்பரியமாக, அயோவா மாகாணத்தில் இருந்து, இந்த தேர்தல் துவங்கும். இந்தாண்டுக்கான காகஸ் தேர்தல், குடியரசு கட்சியில் நேற்று (ஜன.,15) நடைபெற்றது.
குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவரை எதிர்த்து, இந்திய வம்சாவளிகளான, ஐ.நா.,வுக்கான முன்னாள் துாதர் நிக்கி ஹாலே, தொழிலதிபரான விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களம் இறங்கியுள்ளனர். அயோவா தேர்தலில் 51.9 சதவீத ஓட்டுகளுடன் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா கவர்னர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத ஓட்டுகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி 19 சதவீத ஓட்டுகளுடன் 3ம் இடமும், விவேக் ராமசாமி 7.7 சதவீத ஓட்டுகளுடன் 4ம் இடமும் பெற்றனர்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ரேஸில் இருந்து விலகுவதாக விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அயோவா மாகாண உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இந்த அறிவிப்பை விவேக் ராமசாமி வெளியிட்டுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு ஆதரவு தருவதாகவும் அறிவித்துள்ளார். 38 வயதான இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார்; தற்போது தொழில்முனைவோராக உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement