பேங்காக், தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ளன. வரும் பிப்ரவரியில் சீன புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது.
இதனால், பட்டாசு ஆலைகள் இறுதிகட்ட தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது.
வெடி விபத்து நடந்த சமயத்தில் 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வெடிவிபத்து நடந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
வெடிவிபத்தில் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால், மற்றவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஜூலையில் இதே போன்று தாய்லாந்தின் நராதிவாட் மாகாணத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement