சிங்கப்பூர், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன், 61, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ சீயென் லுாங் தலைமையில் மக்கள் செயல்பாட்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு போக்குவரத்து துறை அமைச்சராக, இந்திய வம்சவாளியான ஈஸ்வரன் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் மீது, அங்கு நடந்த கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம், கால்பந்து போட்டி ஆகியவற்றில் நடந்த முறைகேடு, அரசாங்க பிரதிநிதியாக இருந்து பரிசுகளை பெற்றல், முறைகேடான விமான பயணம் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக விசாரணை கடந்த ஜூலை மாதம் முதல் நடந்து வருகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பிரதமர் லீ சீயென் லுாங்கிற்கு ஈஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது:
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். எனது முழு கவனமும், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதிலேயே உள்ளது. இந்த சூழலில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது சரியானது என நினைக்கிறேன்.
எனவே, என் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர் லீ, ”அரசியலில் இருந்து ஈஸ்வரன் விலகுவது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற சூழலில் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது,” என கூறியுள்ளார்.
ஈஸ்வரன் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். முதல்வர் அவருக்கு பரிசளித்து பாராட்டினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement