Pak inside Iran. The airstrike killed nine people, including four children | ஈரானுக்குள் பாக். விமான தாக்குதல் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பதுங்கு இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து, பாகிஸ்தான் துல்லிய தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இது இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், மேற்காசிய நாடான ஈரானுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானின் எல்லையான பலுசிஸ்தானில் உள்ள, ஜெய்ஸ் அல் ஆதில் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, ஈரான் ராணுவம் ஏவுகணை மற்றும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறு விமானங்கள் வாயிலாக தாக்குதலை நடத்தியது.

இதில், இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்க முடியாது

இதையடுத்து, ஈரானில் உள்ள தன் நாட்டு துாதரை பாகிஸ்தான் திரும்பப் பெற்றது. மேலும், பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை, ஈரானில் இருந்து திரும்பி வர வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஈரானின், சியஸ்டான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, ‘பலுசிஸ்தான் லிபரேஷன் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, ஈரான் எல்லைக்குள் உள்ள ஏழு இடங்களில், பாகிஸ்தான் துல்லிய தாக்குதல்களில் நேற்று அதிகாலை ஈடுபட்டது.

போராளிகளுக்கு மரணம் எனப் பொருள்படும், ‘மார்க் பார் சர்மாசார்’ என்ற பெயரில் இந்த ஆப்பரேஷன் நடந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரானின் எல்லை பகுதியில் இயங்கி வரும் இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், தங்களை, போராளிகள் எனப் பொருள்படும், சர்மாசார் என்று அழைத்துக் கொள்கின்றனர்.

தங்களது விமானப் படை விமானங்கள், ஈரானின் எல்லைக்குள் நுழைந்து, பயங்கரவாதிகளின் பகுதிகளை குறிவைத்து துல்லிய தாக்குதல்களில் ஈடுபட்டதாக, பாகிஸ்தான் கூறியுள்ளது.

தன் நாட்டின் இறையாண்மை, மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஈரானை வலியுறுத்தினோம். ஆனால், நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், அங்கிருந்து பயங்கரவாதிகள், எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்துகின்றனர். இதையடுத்தே, பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

பதற்றம்

இந்த தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தானுக்கு, ஈரான் அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஏழு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

ஆனால், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு, செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரான் – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது, இந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் நாசர் கூறுகையில், ”பாகிஸ்தானின் இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. இது குறித்து பாக்., அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.

சமரசத்தில் சீனா

இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழல் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மாவே நிங் கூறியதாவது:

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்து இன்னும் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. ஆனாலும், இந்த விஷயத்தை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறோம். நாடுகளுக்கு இடையேயான உறவு, ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள விதிகளின் படி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும். இரு நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். துாதரக ரீதியில் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா சொல்வது என்ன?

ஈரான் – பாகிஸ்தான் மோதல் குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியுள்ளதாவது:கடந்த, 48 மணி நேரத்தில், மூன்று நாடுகளின் இறையாண்மையை மீறும் செயலில் ஈரான் ஈடுபட்டுள்ளது. செங்கடல் பகுதியில் ஹவுதி பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை முறியடிக்கும் முயற்சியை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதுஒரு பக்கம் பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதே நேரத்தில், அண்டை நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.