
சகிப்புத்தன்மை இல்லையா ? : ஆண்டனி படம் குறித்து வழக்கு தொடர்ந்தவருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஆண்டனி என்கிற திரைப்படம் வெளியானது. மலையாள திரையுலகின் சீனியர் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஜோஷி இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் பிரபல குணச்சித்திர நடிகரான ஜோஜூ ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் பைபிளுக்குள் துப்பாக்கி மறைத்து வைத்து செல்வது போன்று ஒரு காட்சி இடம்பெற்று உள்ளது. இது கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக கூறி அந்த காட்சியை நீக்கும்படி அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறி இந்த படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்ந்தவர் குறிப்பிட்டு இருந்த வார்த்தைகளில் இருந்து ஒரு பாயின்ட்டை எடுத்து சில நொடிகளில் மறைந்துவிடும் ஒரு காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ள அந்த ஒரு புத்தகம் பைபிள் தான் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இப்படி கன நேரத்தில் மறைந்துவிடும் ஒரு காட்சியை கூட சகித்துக் கொள்ளக் முடியாமல் அனைவரையும் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருக்க சொல்கிறீர்களா ? இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஆதாரத்தை விரைவில் சமர்ப்பிப்பதாக வழக்கு தொடர்ந்தவர் கூற, இந்த வழக்கை வேறு ஒரு நாளுக்கு மாற்றி வைத்து உத்தரவிட்டுள்ளார் உயர்நீதிமன்ற நீதிபதி.