தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் 16 பேர் பலி

ரபா,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நேற்று அதிகாலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசின. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானங்கள் மூலம் குண்டுவீசியும், ராணுவத்தினர் தரைவழி தாக்குதல் நடத்தியும் காசாவை தொடர்ந்து நிர்மூலமாக்கி வருகிறது இஸ்ரேல். அங்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் இருக்கும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் சிலர் நோயினால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் கத்தாரின் தலையீட்டால் அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

அவை காசாவை சென்றடைந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பிணைக்கைதிகளிடம் சேர்க்கப்பட்டதா? என்பது உறுதி செய்யப்படவில்லை என கத்தார் கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.